திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி எண் 153ஐ திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு மேல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் 10000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியம் 30000 ரூபாய் வழங்கிட வேண்டும், அடையாள அட்டை வழங்கிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற அறிக்கை அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். புயல், மழை, வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலட்சியப்படுத்துவதாக சாடினர். தமிழ்நாடு அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அக்டோபர் மாதம் 3 நாட்கள் அனல் மின் நிலைய ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு